உத்தரப் பிரதேசத்தில் சோன்பத்ரா என்ற கிராமத்திற்குச் சென்றுகொண்டிருந்த காங்கிரஸ் அரசியல்வாதி பிரியங்கா காந்தியை போலிசார் வழிமறித்து அவரைத் தடுப்புக்காவலில் வைத்துள்ளனர். நிலச் சர்ச்சை ஒன்றின் தொடர்பில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பத்து பேர் உயிரிழந்ததை அடுத்து பிரியங்கா அங்கு சென்றிருந்ததாக இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
கிழக்கு உத்தரப் பிரதேச காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ள பிரியங்கா காந்தி, சோன்பத்ராவுக்கு அருகிலுள்ள மிர்ஸாபூர் சாலையில் காங்கிரஸ் கட்சியினருடன் அமர்ந்திருந்ததை ஊடகப் படங்கள் காட்டுகின்றன. “இரக்கமின்றிச் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரைச் சந்திக்கத்தான் நான் விரும்பினேன். எனது மகனின் அதே வயதுள்ள ஒரு சிறுவன் சுடப்பட்டு இப்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறான். சட்ட ரீதியான எந்த முகாந்திரத்தின் பேரில் நான் தடுக்கப்படுகிறேன் என்று சொல்லுங்கள்,” என்று பிரியங்கா செய்தியாளர்களிடம் கூறினார்.
அரசாங்க அதிகாரி ஒருவரின் வாகனத்தில் பிரியங்கா கொண்டு செல்லப்படும்போது அவர் “என்னை இவர்கள் எங்கு கொண்டு செல்கின்றனர் என்பது எனக்குத் தெரியாது, ஆனால் எங்கும் செல்ல நாங்கள் தயார்,” என்று கூறினார்.
36 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட நிலத்திற்காக துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டோரில் 10 பேர் கொல்லப்பட்டதுடன் 24க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். பிரியங்காவின் தடுப்பு, சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சகோதரரும் காங்கிரசின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்தார்.