தன்னுடன் வேலை பார்த்த 62 வயது ஆங் பெங் ஹாங்கின் குத்துகளிலிருந்து தற்காத்துக்கொள்ளும் முயற்சியாக, குத்தியவரைக் கீழே தள்ளிய 62 வயதான லிம் கியன் செங் என்பவருக்கு அதிகபட்ச தண்டனையாக $2,500 அபராதம் விதிக்கப்பட்டது.
கீழே விழுந்த ஆங்கின் மண்டையோட்டில் முறிவு ஏற்பட்டது. பின்னர் அவர் மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவால் இறந்துபோனார்.
ஆனால் அவரது மரணம் வேறு ஒரு நோய் காரணமாக ஏற்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
டான் ஷிப்பிங் அண்ட் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் பணிபுரிந்த அவ்விருவரும் சிங்கப்பூரர்கள். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி காலை 9 மணியளவில் இறக்குமதிப் பொருட்கள் சிலவற்றை ஆங்கின் வாகனத்தில் ஏற்றிய லிம்மும் ஆங்கும் தத்தம் வாகனங்களில் சென்றனர்.
ஜூரோங் துறைமுகத்தில் திரு ஆங்கின் வாகனத்தில் இருக்கும் பொருட்களை அலகிடல் சோதனைக்கு உட்படுத்தி வரும்படி அதிகாரிகள் பணித்தனர். அதனால் அவர் வாகனத்தைத் திருப்பிச் சென்று ஜூரோங் போர்ட் வாசலில் திரு லிம்முக்காகக் காத்திருந்தார்.
அங்கு வந்த லிம்முக்கும் ஆங்குக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. லிம்மை தாக்கிய திரு ஆங்கிடமிருந்து தப்பித்துக்கொள்ளும் நோக்கில் ஆங்கைத் தள்ளினார் லிம்.
கீழே விழுந்த ஆங்கின் மூக்கிலிருந்து ரத்தம் வடியவே, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் லிம்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஆங்கின் மண்டையோட்டில் முறிவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால், மூளையில் ஏற்பட்ட ரத்தக் கட்டியின் காரணமாக அக்டோபர் மாதம் 19ஆம் தேதி திரு ஆங் மரணமுற்றார்.