போபால்: அதிக நச்சு கலந்த செயற்கைப் பாலை உற்பத்தி செய்ததாக மத்திய பிரதேசத்தில் உள்ள மூன்று நிறுவனங்களைச் சேர்ந்த 87 பேர் கைது செய்யப்பட்டனர்.
குவாலியர்-சம்பல் வட்டாரத்தில் செயல்பட்டு வந்த மூன்று செயற்கை பால் தயாரிப்பு நிறுவனங்களில் சிறப்பு அதிரடிப்படை சோதனை மேற்கொண்டபோது இவர்கள் கைது செய்யப்பட்டதாக அம்மாநில போலிஸ் தெரிவித்துள்ளது.
அதிரடிப் படையின் தலைமை அதிகாரி ராஜேஷ் பதோரியா இதுபற்றி கூறுகையில், "10,000 லிட்டர் கலப்பட பால், 500 கிலோவுக்கும் அதிகமான கலப்பட மாவா எனப்படும் பால்கோவா, 200 கிலோ கலப்பட பனீர் ஆகியவைப் பறிமுதல் செய்யப்பட்டது.
"இவற்றை மற்ற இடங்களுக்கு கொண்டு செல்லப் பயன்படும் 11 வேன்கள், 20 டேங்குகளும் கைப்பற்றப்பட்டன.
"மேலும் அங்கிருந்து திரவ வடிவிலான துணி சோப்பு, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், குளுக்கோஸ் பவுடர் உள்ளிட்டவையும் பெருமளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன," என்றார்.
எண்ணெய், திரவ சோப்பு அல்லது ஷாம்பூ, வெள்ளை பெயிண்ட், குளுக்கோஸ் பவுடர் ஆகியவைச் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படும் இந்த செயற்கை கலப்பட பாலில், 30 விழுக்காடுதான் பால் சேர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சொன்னதாக என்டிடிவி செய்தி கூறுகிறது.
இந்த நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்பட்ட பால், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன.
வெறும் ஐந்து ரூபாய் செலவில் இங்கு தயாரிக்கப்படும் பால், சந்தையில் 45 முதல் 50 ரூபாய் வரை விற்கப்படுவதாகவும் கூறப் படுகிறது.
2 லட்சம் லிட்டர் செயற்கை பால் உற்பத்தி செய்யும் இந்நிறுவனத்திற்கு சில உணவு ஆய்வாளர்களும் உடந்தையாக இருந்துள்ளதாகவும் விரைவில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சோதனையிட்ட அதிகாரிகள் கூறினர்.