நிலவின் தென்துருவப் பகுதியை ஆய்வு செய்வதற்காக ரூ.978 கோடி செலவில் (S$197.2 மில்லியன்) உருவாக்கப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக நேற்று விண்ணில் செலுத்தியது.
இந்திய நேரப்படி பிற்பகல் 2.43 மணிக்கு அந்த விண்கலத்தைச் சுமந்தபடி ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி நிலையத்தில் இருந்து கிளம்பியது. ஏவப்பட்ட 16ஆம் நிமிடத்தில் அது புவியின் சுற்றுவட்டப் பாதையை அடைந்தது. 48வது நாளில், அதாவது செப்டம்பர் 6 அல்லது 7ஆம் தேதியன்று அவ்விண்கலம் நிலவைச் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அதிலிருந்து விக்ரம், பிரக்யான் என்ற இரு விண்கலங்கள் பிரிந்து, நிலவில் 14 நாட்கள் ஆய்வில் ஈடுபட்டு இந்திய விண்வெளி ஆய்வு மையத்திற்கு (இஸ்ரோ) தகவல்களை அனுப்பும். அதே வேளையில், சந்திரயான்-2 விண்கலம் ஓராண்டு காலத்திற்கு நிலவைச் சுற்றிச் சுற்றி வந்து ஆய்வு மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இம்மாதம் 14ஆம் தேதி சந்திரயான்-2 விண்கலத்தை ஏவ திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடைசி நேரத்தில் அம்முயற்சி கைவிடப்பட்டது. இஸ்ரோவால் 2008 அக்டோபரில் ஏவப்பட்ட சந்திரயான்-1 விண்கலம் 2009 ஆகஸ்ட் மாதம் வரை செயல்பாட்டில் இருந்தது.