திருவனந்தபுரம்: காங்கிரஸ் கட்சித் தலைவரின் கருத்துக்கு மதிப்பளித்து கார் பரிசைத் தான் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை என்று பெண் எம்.பி. ரம்யா ஹரிதாஸ் கூறியுள்ளார்.
கேரள மாநிலம், ஆலத்தூர் தொகுதியில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் ரம்யா ஹரிதாஸ்.
இளைஞர் காங்கிரஸ் உறுப்பினரான இவர் கேரளாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே தலித் பெண் எம்.பி. என்ற சிறப்பை பெற்றவர். இளைஞர் காங்கிரசாரின் அபிமானத்தை பெற்றவரான ரம்யா ஹரிதாசுக்கு அந்தக் கட்சி தொண்டர்கள் கார் பரிசு வழங்க திட்டமிட்டனர்.
இதற்காக காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடம் நன்கொடையாக ரூ.14 லட்சம் வசூலித்து காரையும் வாங்கினர்.
இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ரம்யா ஹரிதாசுக்கு கார் பரிசளிப்பதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார். தொண்டர்களிடம் நன்கொடை வசூலித்து கார் பரிசு பெறுவது சரியல்ல. கார் வேண்டுமென்றால் கடன் பெற்று வாங்கிக் கொள்ளலாம் என்று அவர் கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து கட்சித் தலைவரின் கருத்துக்கு மதிப்பு அளித்து கார் பரிசை தான் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை என்று அவர் கூறியுள்ளார். கட்சி தொண்டர்களின் ஆர்வத்திற்காக முதலில் நான் கார் பரிசை பெற சம்மதம் தெரிவித்தேன். அது சரி இல்லை என்று தலைமை கூறியதால் எனது முடிவை மாற்றிக்கொண்டேன் என்று ஃபேஸ்புக்கில் அவர் தெரிவித்து உள்ளார்.