நாட்டுப் பசு இனம் அழிவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்து

நாட்டுப் பசு இனம் அழிவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்து

1 mins read
01d61a67-dc92-42f0-b9bd-92956b070556
நாட்டு மாடுகள் இனம் அழிவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரப்பட்ட வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. - கோப்புப்படம் -

புதுடெல்லி: நமது நாட்டில் தொன்றுதொட்டு இருந்து வரும் நாட்டு மாடுகள் இனம் அழிவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரப்பட்ட வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் மாத்தளா சந்திரபதி ராவ் என்பவர் வழக்குத் தொடுத்துள்ளார். நமது நாட்டில் ஏராளமான நாட்டுப் பசுக்கள், காளைகள் இருந்து வருகின்றன. இவை 35,000 ஆண்டுகளுக்கும் மேலாக நமது நாட்டில் இருந்து வருபவை. ஆனால் இந்த இனங்கள் தற்போது வேகமாக அழிந்து வருகின்றன. இனப்பெருக்கத்துக்காக வெளிநாடுகளில் இருந்து காளைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால் உள்நாட்டுக் காளை இனம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது. மேலும் இனப்பெருக்கத்துக்கு அவை பயன்படுத்தப்படாததால் அந்தக் காளைகள் இறைச்சிக்காகக் கொல்லப்படுகின்றன.

இதுதொடர்பாகத் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் (என்ஜிடி) வழக்குத் தொடுத்தேன். ஆனால் அங்கு எனது கோரிக்கை ஏற்கப் படவில்லை. நாட்டுப் பசுக்கள், காளைகள் இனம் அழிவதைத் தடுக்கவும், வெளிநாட்டிலிருந்து காளைகளை இறக்குமதி செய்வதைத் தடுக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் மத்திய, மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள், மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள், பல்லுயிர் பெருக்க வாரியங்கள் உள்ளிட்ட 90 அமைப்புக்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.