கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையில் நடந்து வந்த ஆட்சியை பாஜக கவிழ்த்துவிட்டு இருக்கிறது என்றும் இத்தகைய காரியம் இதுவரையில் இந்திய அரசியலில் நடந்ததே இல்லை என்றும் காங்கிரஸ் கட்சி கடுமையாகக் குறைகூறி இருக்கிறது.
பாஜகவின் சதியை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாக அந்தக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி அறிவித்தார்.
“எல்லாவற்றையுமே விலை கொடுத்து வாங்கி விட முடியாது என்பதை ஒரு நாள் பாஜக உணரும். ஒவ்வொருவரையும் முட்டாள் ஆக்க முடியாது. மிரட்டவும் முடியாது. பொய் என்றாவது ஒரு நாள் வெளியே வந்தே தீரும்,” என்று காங்கிரஸ் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி கூறினார்.
“இந்தியாவில் பாஜக பல சூழ்ச்சிகளைச் செய்து வருகிறது. நன்கு நிலைபெற்ற அமைப்புகளைக் கீழறுத்து வருகிறது. மக்களுடைய நலன்களைப் பாதுகாக்கவில்லை. ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்துகிறது,” என்று பிரியங்கா காந்தி குறிப்பிட்டு இருக்கிறார்.
இதனிடையே, கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து இந்தியாவில் அந்தக் கட்சி ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை நான்காகக் குறைந்துவிட்டது. பஞ்சாப், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.