கோல்கத்தா: மேற்கு வங்காளத்தில் தெற்கு கோல்கத்தா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 21 வயதான கர்ப்பிணிக்கு ஞாயிற்றுக்கிழமை அழகான பெண் குழந்தை பிறந்தது.
அந்தப் பெண்ணை மருத்துவமனைக்குக் கொண்டுவந்த ஆடவர், தான்தான் குழந்தைக்குத் தந்தை என்று ஆவணங்களில் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், இரண்டாவதாக ஒரு வாலிபர் மருத்துவமனைக்கு வந்து குழந்தையைப் பெற்ற இளம்பெண் தனது மனைவி என்றும் குழந்தை தனக்குப் பிறந்தது என்றும் உரிமை கொண்டாடினார்.
பிரச்சினை பெரிதாகியதும் மருத்துவமனை நிர்வாகம் போலிசை அழைத்தது.
இரண்டாவதாக வந்தவர் அந்தப் பெண்ணுடன் தான் நெருங்கி பழகியதற்கான பல்வேறு சாட்சியங்களைக் காட்டினார். அவற்றைப் பார்த்த போலிஸ் அவரே பெண்ணின் கணவர் என்று முடிவு செய்தது.
இது இப்படி இருக்க, திங்கட் கிழமை மாலை 3வதாக வந்த வேறு ஒரு வாலிபர் தானே அந்தக் குழந்தைக்குத் தந்தை என உரிமை கொண்டாடினார். இதனால் மீண்டும் குழப்பம் நிலவியது.
குழந்தைக்கு உண்மையான தந்தை யார் என்பது அந்தப் பெண் சொன்னால்தான் தெரியும் என்று முடிவு செய்த போலிசார், கடைசியாக குழந்தையைப் பெற்று எடுத்த பெண்ணையே கேட்டார்கள்.
இரண்டாவதாக வந்த வாலிபர்தான் தனது கணவர், அவர் தான் குழந்தைக்குத் தந்தை என்றும் அந்தப் பெண் கூறினார்.
இதனை அடுத்து மற்ற இருவரையும் போலிஸ் விரட்டிவிட்டது.
இரண்டாவது நபரும் பெண்ணும் காதலித்து வந்தனர். பெண் கர்ப்பமானதும் அவரைத் திருமணம் செய்துகொள்ள ஆடவர் தயங்கினார். ஆவேசமடைந்த இளம்பெண் காதலன் மீது புகார் கொடுத்தார்.போலிஸ் ஆடவரைக் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டது.
இந்த நிலையில் அந்தப் பெண் வேறு நபர்களுடன் நட்பாக பழகி வந்த நிலையில், அவரது பிரசவ காலமும் நெருங்கி வந்தது.
இதற்கிடையே பெண்ணின் காதலன் சிறையில் இருந்து வெளியே வந்து வாட்ஸ்அப்பில் தன் காதலியைக் குழந்தையுடன் பார்த்து உடனே மருத்துவமனைக்கு விரைந்தார் என்பது விசாரணையில் தெரியவந்தது.