கோல்கத்தா: மேற்கு வங்காள மாநிலம் பிர்ஜம் மாவட்டம் மர்கிராம் கிராமத்தைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவரின் வயிற்றில் இருந்து 1½ கிலோ எடை கொண்ட தங்க நகைகள் மற்றும் நாணயங்கள் அகற்றப்பட்டன.
இப்போது அந்தப் பெண் குணமடைந்து வருகிறார். இது பற்றி அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் பல விவரங்களைத் தெரிவித்தனர்.
அந்தப் பெண்ணின் அண்ணன் நகைக்கடை வைத்து இருக்கிறார். கடையில் இருந்து நாணயங்களையும் நகைகளையும் வீட்டுக்கு எடுத்து வந்து வைப்பது வழக்கம். திடீர் திடீரென்று நகைகளும் நாணயங்களும் காணாமல் போய் வந்தன. அது பற்றி குடும்பத்தினர் விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் திடீரென்று அந்தப் பெண் வயிற்று வலியால் துடித்ததை அடுத்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சோதித்ததில் தங்க நகைகளையும் நாணயங்களையும் அவர் விழுங்கி இருந்தது தெரியவந்தது.
அவருடைய வயிற்றில் இருந்து 1½ கிலோ எடை உள்ள தங்கம், வெள்ளி நகைகளையும் ரூபாய் நாணயங்களையும் மருத்துவர்கள் வெளியே எடுத்தனர். அந்தப் பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரிவிக்கப்பட்டது.