பிரிட்டிஷ் கொடியைத் தாங்கிய எண்ணெய்க் கப்பலைக் கைப்பற்றிய ஈரானிடம் அந்தக் கப்பலில் இருந்த 18 இந்தியர்களை விரைவில் விடுதலை செய்ய இந்தியா கோரியுள்ளது. 'ஸ்டெனா இம்பெரோ' என்ற அந்தக் கப்பலை ஈரானியப் படையினர் கடந்த வெள்ளிக்கிழமை கைப்பற்றினர். அனைத்துலக கடல் துறைச் சட்டத்தை அந்தக் கப்பல் மீறியிருப்பதாகக் கூறிய ஈரான், பண்டார் அப்பாஸ் துறைமுகத்தில் கப்பலையும் அதற்குள் இருந்த பணியாளர்களையும் தடுத்து வைத்துள்ளது.
கப்பலில் 18 இந்தியர்களைத் தவிர, மூன்று ரஷ்யர்கள், ஒரு லத்திவியர், ஒரு பிலிப்பீனோ ஆகியோர் இருந்தனர்.
ஜூலை மாதம் 14ஆம் தேதி ஈரானியக் கப்பலை பிரிட்டன் பறிமுதல் செய்ததால் ஈரான் ஏட்டிக்குப் போட்டியாக இதனைச் செய்துள்ளதாகக் கருதப்படுகிறது. மத்தியத் தரைக்கடல் பகுதியிலுள்ள கிப்ரல்டார் தீவுக்கு அருகே அந்த எண்ணெய்க் கப்பல், ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகத் தடைகளுக்குப் புறம்பாக சிரியாவுக்கு எரிபொருளைக் கொண்டு சென்ற குற்றச்சாட்டின்பேரில் பிரிட்டன் அதனைத் தடுத்தது.
ஈரானுக்கான இந்தியத் தூதரகப் பிரதிநிதிகள் தடுக்கப்பட்டுள்ள இந்தியக் கப்பல் பணியாளர்களைச் சந்திப்பதற்கான அனுமதியை நாடியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
"ஈரானிய கரைப்பகுதியில் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள 18 இந்தியர்களை முன்கூட்டியே விடுதலை செய்து அவர்களைத் தாயகத்திற்கு அனுப்புமாறு நாங்கள் ஈரானிடம் கேட்டிருக்கிறோம்." என்று வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கைப்பற்றப்பட்ட பிரிட்டிஷ் கப்பலுக்குள் இருந்த இந்திய ஊழியர்கள் கப்பலுக்குள் அமர்ந்து சிரித்துக்கொண்டிருந்ததைக் காட்டும் படங்களை ஈரானிய அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். கப்பலின் சமையலறையில் இருவர் சமைத்துக்கொண்டிருந்ததை ஒரு படம் காட்டுகிறது. ஈரானிய எண்ணெய்க்கப்பலான 'கிரேஸ்-1'ல் இருந்த 24 இந்திய ஊழியர்களைப் பாதுகாப்புடன் கிப்ரல்டார் திரும்ப ஒப்படைக்கும் என்று திரு ரவீஷ் குமார் நம்பிக்கை தெரிவித்தார். அந்த ஊழியர்களைச் சந்திக்க இந்தியத் தூதரகத்தினருக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தனது எண்ணெய்க்கப்பல் விடுவிக்கப்பட்டால் ஈரான் பிரிட்டனின் ஸ்டெனா இம்பேரோவை விடுவிக்கும் என்று பூடகமாகத் தெரிவித்துள்ளது.

