மும்பை நகருக்கு அருகிலுள்ள மும்ப்ராவில் கோவில் பிரசாதத்திற்குள் நச்சுப்பொருளைச் சேர்த்து அங்கு சென்றிருந்த பக்தர்களைக் கொலை செய்யும் முயற்சியின் தொடர்பில் 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மும்மையின் பயங்கரவாத ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
கிட்டத்தட்ட 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மும்ப்ரேஷ்வர் கோவிலில் பக்தர்களுக்குக் கொடுக்கப்படவிருந்த பிரசாதத்திற்குள் நஞ்சைக் கலக்க திட்டமிடப்பட்டதாகப் பயங்கரவாத ஒழிப்புப் பிரிவு தெரிவித்ததாக 'இந்தியா டுடே' செய்தித்தளம் குறிப்பிட்டுள்ளது. கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் கோவில் நிகழ்வில் பக்தர்களுக்குக் கொடுக்கப்பட்ட பிரசாதத்தில் இந்தக் கும்பலைச் சேர்ந்த ஒருவரான தல்ஹா போத்ரிக் விஷத்தைச் சேர்க்க முயன்றதாக போலிசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் உம்மத்-இ முகம்மதியா குழுவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் என்றும் சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாக்கீர் நாயிக்கின் கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் என்றும் போலிசாரின் குற்றச்சாட்டுப் பதிவு ஆவணம் குறிப்பிடுகிறது.

