போபால்: ஓடுபாதையில் இருந்து விமானம் மேலெழும்ப இருந்த நிலையில், விமானி திடீரென அம்முயற்சியைக் கைவிட்டதால் எழுந்த பலத்த சத்தம் காரணமாக பயணிகள் மத்தியில் பரபரப்பு நிலவியது.
இச்சம்பவம் போபால் விமான நிலையத்தில் நிகழ்ந்தது.
திங்கட்கிழமை மாலை தனியார் விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று புறப்படத் தயாரானது. அதில் 150 பயணிகள் இருந்தனர்.
குறித்த நேரத்தில் ஓடுதளத்தில் சென்ற அந்த விமானம் சில நொடிகளில் மேலெழும்ப இருந்தது. அச்சமயம் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி அறிந்தார்.
இதையடுத்து ஓடுதளத்தில் முழு வேகத்தில் சென்று கொண்டிருந்த விமானத்தை அவசர கால பிரேக் இயந்திரத்தைக் கொண்டு அவர் சடாரென நிறுத்தினார்.
இதனால் பெரும் சத்தம் எழுந்தது. அதைக் கேட்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
எனினும் யாருக்கும் எந்தக் காயமும் இன்றி விமானம் நிறுத்தப்பட்டது என்றும், தொழில்நுட்பக் கோளாறுகள் சரி செய்யப்பட்ட பின்னர் அவ்விமானம் மும்பை புறப்பட்டுச் சென்றதாகவும் விமான நிறுவனத்தின் மேலாளர் தெரிவித்துள்ளார்.

