மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியைச் சந்தித்தது.
இதற்கிடையே, வரும் அக்டோபர் மாதத்தில் மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கியதை தொடர்ந்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளும் பாரதிய ஜனதா, சிவசேனா ஆகிய கட்சிகளுக்குத் தாவி வருகின்றனர். இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மும்பை வடாலா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காளிதாஸ் கோலம்கர் நேற்று பதவி விலகுவதாக அறிவித்தார்.
மேலும், தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வைபவ் பிச்சாத் (அகோலா தொகுதி), சிவேந்திர ராஜே போசலே (சத்தாரா), சந்தீப் நாயக் (ஐரோலி) ஆகியோரும் தஙகளது பதவியை ராஜினாமா செய்தனர்.
இவர்கள் சபாநாயகர் ஹரிபாவு பாகடேவை சந்தித்து பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்தனர்.
இந்நிலையில், பதவி விலகிய தேசியவாத காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மூன்று பேரும் நேற்று மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.