புதுடெல்லி: முத்தலாக் தடைச் சட்டத்துக்கு அதிபர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அச்சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்திலும், டெல்லி உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த சமஸ்தா கேரளா ஜமைத்துல்லா என்ற இஸ்லாமிய அமைப்பு உச்ச நீதிமன்றத்திலும், வழக்கறிஞர் ஷாகித் அலி என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்திலும் தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீதான விசாரணை விரைவில் நடைபெற உள்ளது.
முத்தலாக் தடைச் சட்டம் குறிப்பிட்ட மதத்தை அடையாளப்படுத்தியும், அந்த மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு தண்டனை விதிக்கும் வகையிலும் கொண்டு வரப்பட்டுள்ளதாக சமஸ்தா கேரளா அமைப்பு தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது மக்களிடையே தவறான புரிதலை ஏற்படுத்தும் என்றும், சமூகத்தில் ஒற்றுமையின்மையையும் நல்லிணக்கத்தையும் குலைத்துவிடும் என்றும் அந்த அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
புதிதாக கொண்டுவரப்பட்ட முத்தலாக் தடைச் சட்டத்தில், முஸ்லிம் கணவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், பிணையில் வெளிவரமுடியாத பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளதை வழக்கறிஞர் ஷாகித் அலி தமது மனுவில் சுட்டிக்காட்டி உள்ளார். இது கணவன், மனைவி இடையே நடக்கும் அனைத்து சமரசங்களுக்குமான கதவை அடைக்கும்விதத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, ஹரியானாவில் தனது மனைவியை முத்தலாக் கூறி விவாகரத்து செய்தவர் மீது உத்தரபிரதேசத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
32 வயதான இக்ரம் என்பவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜூம்ரியாத் என்ற பெண்ணை மணந்துள்ளார்.
பின்னர் ஒரு லட்சம் ரூபாய் வரதட்சணை பெற்று வருமாறு மனைவியை அவர் துன்புறுத்தியதாகவும், நேற்று முன்தினம் மூன்று முறை தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கணவர் மீது ஜூம்ரியாத் அளித்த புகாரின் பேரில் போலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

