மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் குறிப்பாக மும்பை நகரிலும் இதர பகுதிகளிலும் இடைவிடாது பெய்துவரும் பேய் மழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதுவரையில் ஆறு பேர் மாண்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
ரயில்நிலையங்கள் போன்ற பல இடங்களிலும் சிக்கிக்கொண்டுள்ள மக்கள் மீட்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் மழை மேலும் சில நாட்களுக்குத் தொடரும் என்று வானிலை ஆய்வு மையமும் பேரிடர் கட்டுப்பாட்டு மையமும் எச்சரிக்கை விடுத்துள்ளதால் மும்பையில் நேற்று பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. அவசர கால பணிகளை மேற்கொள்ளும் அரசு அலுவலகங்கள் மட்டுமே இயங்கும் எனவும் தனியார் அலுவலக ஊழியர்கள் அவசர தேவை என்றால் மட்டுமே பணிக்குச் செல்லுமாறும் மும்பை மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடற்கரை போன்ற பகுதிகளுக்கு இன்னும் சில நாட்களுக்கு யாரும் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது. மகாராஷ்டிராவில் மும்பை, தானே உள்ளிட்ட பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக மாறிவிட்டது. மீட்புப் பணிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

