நிஜாமாபாத்: தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவருக்கு கடைசி நேரத்தில் துபாய் லாட்டரியில் யோகம் அடித்தது. ரூ.28 கோடி பரிசு கிடைத்ததை அடுத்து அவர் அதை வாங்கி வருவதற்காக பரபரப்பாக துபாய் கிளம்புகிறார்.
தெலுங்கானாவில் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ரிக்காலா விலாஸ் என்ற விவசாயி தன் ஊரில் கடுமையான வறட்சி ஏற்பட்டத்தைத் தொடர்ந்து பிழைப்புக்காக அவர் மத்திய கிழக்குக்குச் சென்றார்.
சரியான வேலை கிடைக்காததால் ஐக்கிய அரபு சிற்றரசில் மிகவும் சிரமப்பட்டு கட்டுமான ஊழியராக வேலை பார்த்தார். பிறகு சிறிது காலம் கார் ஓட்டுநராகவும் பணியாற்றினார்.
இந்த நிலையில் அவருடைய விசா முடிந்தது. தாயகம் திரும்ப எல்லா ஏற்பாடுகளையும் செய்துவந்தார்.
கேரளாவைச் சேர்ந்த ஒருவருக்கு துபாய் லாட்டரியில் பல கோடி ரூபாய் பணம் பரிசாகக் கிடைத்த செய்தி அப்போது நினைவுக்கு வர உடனே அபுதாபி ரஃபேல் என்ற லாட்டரி நிறுவனத்திடமிருந்து ரூ20,000 (இந்திய மதிப்பு) கொடுத்து லாட்டரியை ரிக்காலா வாங்கினார்.
பிறகு ஊர் திரும்பிவிட்டார். அவர் வாங்கி இருந்த எண் 222805 கொண்ட லாட்டரி சீட்டுக்குப் பரிசு அடித்த செய்தியை ஆகஸ்ட் 3ஆம் தேதி லாட்டரி நிறுவனம் அவரிடம் தெரிவித்தது. அந்தச் செய்தியை உறுதிப்படுத்திக்கொண்ட ரிக்காலா அதை தாயார், மனைவியிடம் தெரிவித்தார். பரிசை வாங்கி வர துபாய் போக ஆயத்தமாகி வருகிறார் ரிக்காலா.