அமராவதி: சமூக வலைத்தளத்தில் வெளியான சில புகைப்படங்களை வைத்து ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை அம்மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு விமர்சித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அவற்றுள் ஒரு படத்தில் ஆந்திராவின் அங்கீகரிக்கப்பட்ட சமூகநல செயல்பாட்டாளர்கள் ஜெகன்மோகனுக்கு பாலாபிஷேகம் செய்வது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
மேலும் ஆந்திர அரசுக்குச் சிலர் இறுதிச் சடங்கு நடத்தும் காட்சியும் மற்றொரு படத்தில் சித்திரிக்கப்பட்டிருந்தது.
இரு படங்களையும் தமது பதிவில் சேர்த்துக்கொண்ட சந்திரபாபு நாயுடு, ‘இது தேர்தலுக்கு முன்பும் பின்பும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
தற்போது இந்த சமூக நலச் செயற்பாட்டாளர்கள் பெற்று வரும் மூவாயிரம் ரூபாய் ஊதியம் பத்தாயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என ஜெகன் மோகன் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். இதையடுத்து அவ்வாறு ஊதியம் உயர்த்தப்படவில்லை என தமது பதிவில் சுட்டிக் காட்டியிருந்தார் சந்திரபாபு நாயுடு.
இந்நிலையில் அவர் வெளியிட்ட படங்கள் இரண்டும் முன் எப்போதோ எடுக்கப்பட்டவை என்பது தற்போது தெரியவந்துள்ளது.
ஆனால் அவை தற்போது வெளியிடப்பட்டதாகக் கருதி சந்திரபாபு நாயுடு மாநில அரசையும் முதல்வரையும் விமர்சித்திருந்தார்.
உண்மை விவரங்கள் தெரிய வந்ததும் கடந்த 8ஆம் தேதி தமது சமூக வலைத்தளப் பதிவை நாயுடு அகற்றிவிட்டார்.