லடாக்: லடாக் எல்லையில் பாகிஸ்தான் போர் விமானங்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் இந்திய ராணுவம் விழிப்புநிலைப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அம்மாநிலத்தை இரண்டாகப் பிரித்து ஜம்மு காஷ்மீரைச் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும் லடாக்கை சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் மத்திய அரசு அறிவித்தது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான், இந்தியாவுக்கான தனது தூதரைத் திரும்ப அழைத்துக் கொண்டது. இதற்கிடையே இந்தியத் தூதரும் பாகிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்டு, நேற்று அவர் இந்தியா திரும்பினார்.
இந்த நிலையில் லடாக் எல்லையில் பாகிஸ்தானின் பகுதியான ஸ்கர்டு விமானப்படை தளத்தில் ஜே.எப்.17 ரக போர் விமானங்களை நிறுத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த விமானப்படைத் தளத்தில் பாகிஸ்தானின் சரக்கு மற்றும் போர் விமானங்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக இந்தியாவுக்குத் தகவல் கிடைத்து இருக்கிறது. சி-130 சரக்கு விமானங்கள் விமானப்படை தளத்துக்கு வந்து சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இதையடுத்து, பாகிஸ்தான் போர் விமானங்களின் நடமாட்டத்தை இந்திய ராணுவம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. இந்த நிலையில் காஷ்மீரில் நேற்று ஹஜ்ஜுப் பண்டிகை அமைதியாகக் கொண்டாடப்பட்டதாக உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்து இருக்கிறது.சில இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றதால், அங்கு மீண்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதற்கிடையே, டெல்லி- லாகூர் பேருந்து சேவையையும் பாகிஸ்தான் நேற்று ரத்து செய்தது.