ஸ்ரீநகர் நிலைமையை திறமையாக கையாண்ட பெண் அதிகாரிகளுக்கு குவியும் பாராட்டுகள்

ஸ்ரீநகர் நிலைமையை திறமையாக கையாண்ட பெண் அதிகாரிகளுக்கு குவியும் பாராட்டுகள்

1 mins read
39db3271-b5d5-4112-80ed-704710ba4b85
ஸ்ரீநகரில் நியமிக்கப் பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரி அஸ்கர், ஐபிஎஸ் அதிகாரி நித்யா. படம்: இணையம் -

ஸ்ரீநகர்: காஷ்மீர் பிரிக்கப்பட்ட நிலையில் ஸ்ரீநகர் பாதுகாப்புப் பணியில் முக்கிய பங்காற்றிய இரண்டு பெண் அதிகாரிகளுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதற்கு 4 நாட்களுக்கு முன்பு ஸ்ரீநகரில் தகவல்தொடர்பு இயக்குனராக ஐஏஎஸ் அதிகாரியான சயித் செஹ்ரிஸ் அஸ்கர் என்பவர் நியமிக்கப்பட்டார்.

மருத்துவராக இருந்து ஐஏஎஸ் அதிகாரியான இவர், ஸ்ரீநகரைச் சேர்ந்தவர்கள் தொலைதூரத்தில் உள்ள தங்களது உறவினர்களுடன் பொது தொலைபேசிகள் மூலம் தொடர்புகொள்ள உதவி செய்துள்ளார்.

தொலைபேசி, இணையதள சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், அஸ்கர் செய்த உதவி பொதுமக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்ததால் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

இதேபோல், சண்டிகரைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான நித்யா என்பவர் ஸ்ரீநகரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.

தால் ஏரி, ஆளுநர் மாளிகை, முக்கிய தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த இடங்களின் பாதுகாப்பை இவர் கையாண்டார்.

சவாலான நேரத்தில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளான அஸ்கர், நித்யா ஆகியோருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

பெரும்பாலான பெண் அதிகாரிகள் ஜம்மு, லடாக் பகுதிகளில் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பதற்றம் நிறைந்த ஸ்ரீநகரில் நியமிக்கப்பட்டுள்ள பெண் அதிகாரிகள் இந்த இருவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.