புதுடெல்லி: இயற்கை வளத்தை அழிக்காமல் எதிர்காலத் தலை
முறைக்கு விட்டுச் செல்ல வேண்டும் என்று 'மேன் வெர்சஸ் வைல்டு' நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுஉள்ளார்.
மக்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரதமர் மோடி ஃபேர் க்ரில்ஸ் தொகுத்து வழங்கும் 'மேன் வெர்சஸ் வைல்டு' நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜிம்கார்பெட் தேசிய பூங்காவில் படம் பிடிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி நேற்று முன்தினம் ஒளி்பரப்பானது.
இந்த சாகசப் பயணத்தின் போது, க்ரில்ஸ் மோடியிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். இதற்கு அமைதியாகப் பதிலளித்த பிரதமர் மோடி, மக்களின் கனவுகளை நிறைவேற்றுவதே தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
மேலும் நாட்டின் வளர்ச்சியில் தனது முழு கவனமும் இருப்பதாக கூறிய அவர், 18 ஆண்டுக்கால அரசுப் பணியில் தற்போது தான் விடுப்பு எடுப்பதாக நெகிழ்ச்சியுடன் கூறினார்.
அனைத்துச் செயல்களிலும் சாதக நிலையை எதிர்பார்த்து செயல்படுவதால் பயம் என்பது தனக்கு இல்லை என்றும் மக்கள் இயற்கை வளத்தை அழிக்காமல் எதிர்கால தலைமுறைக்கு விட்டுச் செல்ல வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை தனித்தனியாக பிரித்து பார்ப்பதற்கு பதில் ஒட்டுமொத்தமாக பார்த்து தாழ்வு நிலையில் இருந்து முன்னேறி வரவேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

