வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று கர்நாடக முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா அறிவித்துள்ளார். வெள்ளம் காரணமாகப் பாதிக்கப்பட்டு செய்வதறியாது தவிக்கும் கர்நாடகா மக்களுக்கு 10,000 ரூபாய் முன்பணமாகக் கொடுக்கப்படும் என்று துயர் துடைப்பு மையத்தில் செய்தியாளர்களிடம் எடியூரப்பா தெரிவித்தார்.
கர்நாடகாவில் உள்ள 17 மாவட்டங்களில் வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் பல வீடுகள் சேதமடைந்தன. வீடுகளை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு இந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.
அதுமட்டுமல்லாது, சேதமடைந்த வீடுகளை பழுதுபார்க்கும் வரையிலும் அல்லது புதிய வீடுகளைக் கட்டும் வரையிலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீட்டு வாடகைக்காக மாதந்தோறும் 5,000 ரூபாய் வழங்கப்படும் என்று கர்நாடகா அரசாங்கம் தெரிவித்தது.
கார்நாடகாவின் கடலோர, மத்திய, வடமேற்குப் பகுதிகளில் வெள்ளம் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள், சந்தைகள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் உள்ள சாலைகள் சேதமடைந்துள்ளன.
"அடுத்த சில நாட்களில் மழை குறைந்து, வெள்ளம் வடிய தொடங்க வேண்டும் என்றும் வெள்ளத்தின் சீற்றத்தால் நிலைகுலைந்துப் போயிருக்கும் மாவட்டங்களில் நிலைமை மேம்பட வேண்டும் என்றும் நான் வேண்டிக்கொள்கிறேன்," என்று மாநிலத்தின் தென்பகுதிகளில் உள்ள தக்ஷின கன்னடா, குடகு ஆகிய மாவட்டங்களுக்குச் சென்று நிலைமையை நேரில் கண்ட எடியூரப்பா தெரிவித்தார்.
வெள்ளம் காரணமாக கர்நாடகாவில் இதுவரை 48 பேர் மாண்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து 581,887 பேரை தேசிய, மாநில இயற்கைப் பேரிடர் மீட்புப் படைகள், இந்தியக் கடற்படை, இந்திய ஆகாயப் படை, கர்நாடக தீயணைப்புப் படை ஆகியவற்றின் அதிகாரிகள் மீட்டனர்.
மாநி-ல-மெங்-கும் அமைக்-கப்-பட்-டுள்ள துயர் துடைப்பு முகாம்-களில்
332,629 பேர் தஞ்-சம் அடைந்-துள்-ள-னர்.

