புதுடெல்லி: இந்தியா இன்று 72வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நிலையில் நாடு முழுவதும் உச்சகட்ட விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளது. முக்கிய நகரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். இதையொட்டி அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
செங்கோட்டையைச் சுற்றிலும் அதிக திறன் வாய்ந்த 500 சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
இது தவிர, குடியரசுத் தலைவர் மாளிகை, பிரதமர் இல்லம் உள்ளிட்ட பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அண்மையில் காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதன் எதிரொலியாக, சுதந்திர தினத்தன்று, தீவிரவாதிகளால் அசம்பாவிதங்கள் ஏற்படக்கூடும் என அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு எச்சரிக்கைத் தகவல் ஒன்றை அனுப்பியது.
இதையடுத்து, காஷ்மீர் மாநில எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
புதுடெல்லி, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில், துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினர் கடந்த சில நாட்களாக வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
மும்பை, சென்னை போன்ற முக்கிய நகரங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சம் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
குறிப்பாக, தலைநகர் சென்னையில் 15,000 போலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முதல்வர் கொடியேற்றும் ஜார்ஜ் கோட்டையில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை சென்டிரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
பயணிகளும் அவர்களது உடைமைகளும் ‘மெட்டல் டிடெக்டர்’ கருவி மூலம் சோதனை செய்த பிறகே ரயிலில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
விமான நிலையங்களில் மோப்ப நாய்கள் மூலம், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். கோவில்கள், வணிக வளாகங்கள், பொழுதுபோக்கு தலங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.