புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் எடுக்கப்பட்டதைக் காட்டிலும் பெரிய முடிவு எதுவும் இருக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இரண்டாவது முறை பிரதமராகப் பதவியேற்று 75 நாட்களை நிறைவு செய்துள்ள திரு மோடியை தனியார் செய்தி நிறுவனம் ஒன்று பேட்டி கண்டது.
அப்போது, தங்களது ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள், 75 நாட்களில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் தொடர்பாக பல்வேறு கேள்விகள் அவரிடம் எழுப்பப்பட்டன.
அப்போது பேசிய பிரதமர் மோடி, சரியான நோக்கங்கள், தெளிவான கொள்கைகள் என்ற அடிப்படையில் அரசு செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார். சந்திரயான் 2, முத்தலாக் தடைச் சட்டம், நீர் விநியோகம் மற்றும் மேலாண்மைக்காக ‘ஜல் சக்தி’ அமைச்சகம் உருவாக்கப்பட்டது என பல்வேறு திட்டங்களை அவர் எடுத்துரைத்தார்.
தீவிரவாதிகள் மீது பரிதாபம் கொண்டோரும் பரம்பரை அரசியல்வாதிகளும்தான் காஷ்மீர் விவகாரத்தில் அரசியல் செய்கின்றனர் என்ற திரு மோடி, “இது நாட்டு நலன் சார்ந்த பிரச்சினை. மக்களின் விருப்பப்படி ஜம்மு காஷ்மீரும் லடாக்கும் மேம்படுத்தப்படும்,” என்று குறிப்பிட்டார்.