ஒவ்வொரு வீட்டில் இருந்தும் குறைந்தது ஒருவரேனும் இந்திய ராணுவத்தில் இருப்பதால் சுற்று
வட்டாரவாசிகளால் ‘ராணுவ கிராமம்’ என அழைக்கப்பட்டு வருகிறது தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் அமைந்திருக்கும் தர்மாபுரி எனும் சிற்றூர்.
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியை அகற்றும் நோக்கில் சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய ராணுவத்தைத் தொடங்கினார். அப்போது தொடங்கிய தர்மாபுரி மக்களின் ராணுவப் பற்று, இன்னும் சற்றும் மங்காமல் ஒளிர்ந்து வருகிறது.
ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் இணைந்து ‘முன்னாள் ராணுவத்தினர் நலச்சங்கம்’ என்ற அமைப்பை நடத்தி வருகின்றனர். தர்மாபுரி இளையர்களை ராணுவத்தில் சேர்வதற்கு ஆயத்தப்படுத்தும் வகையில் சிறு வயதிலிருந்து அவர்களுக்குப் பயிற்சியளிப்பதே அந்தச் சங்கத்தின் தலையாய பணி.
தற்போது அந்தப் பணியை மேற்கொண்டு வருகிறார் முன்னாள் ராணுவ வீரரான திரு இந்திரன்.
“பயிற்சிக்காக கட்டணம் வசூலிப்பதில்லை. தமிழகத்திலேயே வேலூர் மாவட்டம்தான் அதிக அளவில் ராணுவ வீரர்களைக் கொண்டுள்ளது. இரண்டாமிடத்தில் இருக்கும் தேனியை முதலிடத்திற்கு முன்னேற்றுவதே எங்களுடைய குறிக்கோள்,” என்றார் அவர்.
பள்ளிப் படிப்பு முடிந்ததும் தமிழகத்தில் எங்கு ஆள்சேர்ப்பு முகாம் நடந்தாலும் முதல் ஆளாக அங்கு சென்றுவிடுகின்றனர் தர்மாபுரி இளையர்கள். அதற்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுக்கின்றனர் அவ்வூரைச் சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர்.
தன்னுடைய மூன்று அண்ணன்களும் ராணுவத்தில் இருக்கும் நிலையில், அவர்களைப்போலவே நாட்டிற்கு சேவையாற்ற விரும்புகிறார் முதுநிலைப் பொறியியல் பட்டதாரியான ஜெகத்ரட்சகன்.
“எனது கல்வித் தகுதிக்கு ஏற்ற தேர்வெழுதி, ராணுவத்தில் உயர் அதிகாரியாகப் பணியாற்றுவதே எனது குறிக்கோள்,” என்கிறார் அவர்.
தர்மாபுரியைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் பலர் நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.