புதுடெல்லி: சிறைபிடிக்கப்பட்ட ஈரானிய சரக்குக் கப்பலில் இருந்த இந்தியர்கள் 24 பேர் உட்பட 28 பேரையும் பிரிட்டிஷ் அரசு நேற்று முன்தினம் விடுவித்தது. அவர்
களுள் நவீன்குமார் ஜீவானந்தம், பாலாஜி பாலமுருகன் என்ற இரு தமிழர்களும் அடங்குவர்.
சென்ற ஜூலை மாதம் 4ஆம் தேதி ‘கிரேஸ் 1’ எனும் ஈரானிய சரக்குக் கப்பலை மத்திய தரைக்
கடல் பகுதியில் பிரிட்டிஷ் கடற்படை சிறைபிடித்தது.
பிரிட்டிஷ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நுழைந்ததால் அந்தக் கப்பல் சிறைபிடிக்கப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்தது.
இதையடுத்து, மனிதாபிமான அடிப்படையில் கப்பலில் பணியாற்றி வந்த இந்தியர்கள் 24 பேரையும் விடுவிக்கவேண்டும் என்று இந்திய அரசு, பிரிட்டனிடம் வலியுறுத்தியது.
இந்த நிலையில், சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் இருந்த அதன் ஊழியர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்கும்படி ஜிப்ரால்டர் உச்ச நீதிமன்றம், ராயல் ஜிப்ரால்டர் போலிசுக்கு உத்தரவிட்டது.
“விடுதலை செய்யப்பட்டதால் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்,” என்றார் நாமக்கல்லைச் சேர்ந்த திரு நவீன்.
கப்பலைவிட்டு வெளியேற தாங்கள் அனுமதிக்கப்படவில்லை என்ற அவர், இருப்பினும் தங்களது வேலைகளைத் தொடர அனுமதிக்கப்பட்டதாகவும் தாங்கள் நல்ல முறையில் நடத்தப்பட்டதாகவும் கூறினார்.
அவருடன் மேலும் எழுவர் தங்களின் சொந்த நாட்டிற்குத் திரும்ப முடிவெடுத்துள்ளதால் அவர்களை வேலையிலிருந்து விடுவிக்க கப்பல் நிறுவனம் ஒப்புக்கொண்டது.
சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த திரு பாலாஜி பாலமுருகன் அக்கப்பலிலேயே தொடர்ந்து பணிபுரிய விருப்பம் தெரிவித்துள்ளார்.