காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது தொடர்பாக ஆலோசிக்க ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றபோது சீனா அக்கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிப்பதுபோல நடந்துகொண்டது.
அப்போது இந்தியாவின் செயலைக் கண்டிக்கும் வகையில் இதனை ஓர் அனைத்துலகப் பிரச்சினையாக சபையின் தலைவர் ஜோனா ராநேக்கா சம்பிரதாய அறிவிப்பை வெளியிட வேண்டும் என சீனா யோசனை தெரிவித்தது. அந்த யோசனையை பிரிட்டன் ஆதரித்தது.
இருப்பினும், சபையில் இதர நிரந்தர உறுப்பு நாடுகள் அத்தகைய அறிக்கையை எதிர்த்தன. காஷ்மீர் விவகாரத்தை இந்தியாவும் பாகிஸ்தானுமே இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளும் என்று அவை தெரிவித்தன. குறிப்பாக, இந்தியாவுக்கு பக்கபலமாக ரஷ்யா குரல் எழுப்பியது.
அமெரிக்க ஆதரவைத் திரட்டும் நோக்கில் அதிபர் டோனல்ட் டிரம்ப்புடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொலைபேசியில் நடத்திய உரையாடலும் பயனற்றுப் போனது.
மேலும், கூட்டம் நடைபெறும் முன் அதே வெள்ளிக்கிழமை காஷ்மீர் மாநில அரசு வெளியிட்ட வழக்கநிலை மீட்பு அறிவிப்பு பாதுகாப்பு சபையைக் கவர்ந்தது.
தொலைத்தொடர்புகள் வழக்கத்திற்குத் திரும்பும் என்றும் திங்கட்கிழமை முதல் பள்ளிக்கூடங்கள் இயங்கும் என்றும் மாநில தலைமைச் செயலாளர் பிவிஆர்
சுப்பிரமணியம் அறிவித்திருந்தார்.
அத்துடன் தடுத்துவைக்கப்பட்டுள்ள தலைவர்கள் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்றும் நேற்று முன்தினம் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நடவடிக்கைகளை பாதுகாப்பு சபை பாராட்டியது. மேலும் சீனா, பாகிஸ்தான் ஆகியவற்றின் எதிர்ப்பு முயற்சிகளிலிருந்து தப்பிக்கவும் இந்த அறிவிப்புகள் இந்தியாவுக்கு உதவின. இதனை ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி சையது அக்பருதீன் தெரிவித்தார்.
மேலும் ஜம்மு காஷ்மீர் விவகாரம் முழுக்க முழுக்க இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினை என்றும் அவர் கூறினார். “லடாக் மற்றும் காஷ்மீர் மக்களுக்கு சமூக, பொருளியல் ரீதியான வளர்ச்சியை ஏற்படுத்துவதே இந்தியாவின் நோக்கம். தேவையில்லாமல் பதற்றத்தை உருவாக்கும் வேலைகளில் பாகிஸ்தான் இறங்கியுள்ளது. அந்நாடு முதலில் தீவிரவாதத்திற்கு ஆதரவு அளிப்பதை நிறுத்த வேண்டும்,” என்றார் திரு அக்பருதீன்
இதற்கிடையே, திரு சுப்பிரமணியம் அறிவித்தபடியே நேற்றுக் காலை முதல் 2ஜி இணையச் சேவைகள் சில மாவட்டங்களில் மீண்டும் செயல்படத் தொடங்கின.
கடந்த 5ஆம் தேதி சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதிலிருந்து முடக்கிவைக்கப்பட்ட தொலைத்தொடர்பு சேவைகள் ஜம்மு, சம்பா, கத்துவா, உதம்பூர், ரியாசி ஆகிய பகுதிகளில் நேற்றுக் காலை மீண்டன. ஆய்வுக்குப் பின்னர் இதர பகுதிகளிலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.