ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியதும், வன்முறை ஏதும் ஏற்படாத வண்ணம் இருக்க மத்திய அரசு தகவல் தொடர்பு உள்பட பல தடைகளை அமல்படுத்தியது. குறிப்பாக ஸ்ரீநகர் மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் கூடுதலாக படைகள் குவிக்கப்பட்டன.
சுதந்திர தினத்திற்குப் பிறகு பெரும்பாலான இடங்களில் தடைகள் தளர்த்தப்பட்டன. ஜம்மு, லடாக் போன்ற பகுதியில் மக்கள் இயல்பான நிலைக்குத் திரும்பினாலும் ஸ்ரீநகர், பள்ளத்தாக்கில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருவதாக கூறப்படுகிறது.
இரு தினங்களுக்கு முன்பு ஸ்ரீநகரில் 35 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட இடங்களில் தொலைத்தொடர்பு உள்பட பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.தொலைத் தொடர்பு, இணையச் சேவைகளை மக்கள் பயன்படுத்தத் தொடங்கினர்.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் வெளியில் வந்த இளைஞர்களுக்கும் பாதுகாப்பில் இருந்த போலிசாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. அப்போது பல இளைஞர்கள் காயம் அடைந்தனர். நிலைமையைக் கட்டுக்குள் வைக்கும் நோக்கில் கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஹஜ் பயணம் மேற்கொண்டவர்களில் சிலர் ஸ்ரீநகர் விமான நிலையம் வந்தடைந்தனர்.அவர்களை இந்திய அதிகாரிகள் விமான நிலையத்துக்கே சென்று வரவேற்றனர்.
பின்னர், அவர்கள் தக்க பாதுகாப்பு வசதிகளுடன் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.