பெங்களூரு: பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து, கர்நாடகாவில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, அம்மாநிலத் தலைநகர் பெங்களூரு, காவல் துறையின் முழுமையான கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
அந்நகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் போலிசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் நகர் முழுவதும் காவல்துறையினரும் கருடா அதிரடிப்படையினரும் தீவிர சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பெங்களூருவுக்குக் கூடுதல் அச்சுறுத்தல் இருப்பதால் கர்நாடகா ரிசர்வ் படை போலிசார், நகர ஆயுதப்படை போலிசார் ஆகியோருடன் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ராணுவத்தினரும் சுற்றுக் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பெங்களூருவில் உள்ள வணிக வளாகங்கள், முக்கிய சந்தைகள், வழிபாட்டுத் தலங்களில் போலிசார் 24 மணி நேர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், தனியார் தங்கு விடுதிகளில் தங்கி இருப்பவர்களின் விவரங்கள் சேகரிக்கப்படுவதாகவும் பெங்களூரு காவல்துறை ஆணையர் பாஸ்கர் ராவ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நாட்டின் முக்கிய நகரங்களில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாகவும் இது தொடர்பாக மத்திய அரசு விடுத்த எச்சரிக்கையின் பேரில் பெங்களூருவில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
பெங்களூருவில் உள்ள ரயில், பேருந்து, விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கியமான இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலிசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
ரயில், விமானப் பயணிகள் மெட்டல் டிடெக்டர் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இந்தத் திடீர் பாதுகாப்பு ஏற்பாடுகளும் சோதனை நடவடிக்கைளும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.