புதுடெல்லி: வடஇந்தியாவில் பல மாநிலங்களிலும் தென்மேற்குப் பருவமழை தொடர்ந்து பேய்மழையாக கொட்டி வருவதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக நேற்று தகவல்கள் தெரிவித்தன.
ஹரியானா, பஞ்சாப், உத்ரகாண்ட், உத்தரப்பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தொடர் மழை காரணமாக நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது.
புதுடெல்லியை நேற்று யமுனை நதி மிரட்டியதை அடுத்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உடனடி கூட்டத்தை நடத்தி அதிகாரிகளுடன் பலவற்றையும் விவாதித்தார்.
டெல்லியில் தாழ்ந்த பகுதிகளில் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேறிவிட வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டு இருக்கிறது.
உத்ரகாண்ட், இமாச்சலப் பிரதேசத்தில் ஒரு சில நாட்களில் மட்டும் 30 பேர் மரணமடைந்து விட்டனர். டஜன் கணக்கான மக்களைக் காணவில்லை. பஞ்சாப், உத்ரகாண்ட் மாநிலங்களில் அதிகாரிகள் பல இடங்களிலும் மீட்புப் பணிகளைத் தொடங்கி இருக்கிறார்கள். இமாச்சலப் பிரதேசத்தில் பலத்த மழை காரணமாக சிம்லா மற்றும் குலுவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
அந்த மாநிலத்தில் பியாஸ் மற்றும் சட்லெஜ் நதிகளில் வெள்ளம் அதிகரித்து வருவதால் பல அணைகள் திறக்கப்பட்டு உள்ளன. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் கனமழை வெள்ளத்தால் 17 பேர் உயிரிழந்தனர். 20 க்கும் அதிக மக்களைக் காணவில்லை.
சார்தாம் யாத்திரை பாதை, ரிஷிகேஷ்-பத்ரிநாத் தேசிய நெடுஞ் சாலை, கேதார்நாத் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு அவை பாதிக்கப்பட்டுள்ளன.
கைலாஷ்-மானசரோவர் புனித யாத்திரை வழித்தடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் யாத்ரீகர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். உத்ரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் இரண்டு மாநிலங்களில்தான் படுமோசமான பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கின்றன. நிலச்சரிவு காரணமாக மின்சார ஆலைகள் செயல்படாமல் போய்விட்டன.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள கங்கை, யமுனா, கக்ரா நதிகளில் அண்டை மாநிலங்களில் பெய்த மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதாக மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இவ்வேளையில், மகாராஷ்டிராவின் புனேவில் வெள்ளத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்து உள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் வட இந்தியா வில் பல மாநிலங்களிலும் மழை தொடர்ந்து பொழிய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு நிலையம் எச்சரித்துள்ளது.