உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓர் ஆடவர் தனது மனைவியை விவாகரத்து செய்யவிருக்கிறார். அந்தப் பெண் தனது கணவருக்குச் சில மாதங்களாக லட்டு மட்டும் கொடுத்ததே கணவரின் முடிவுக்குக் காரணம்.
மீரட் நகரைச் சேர்ந்த அந்தத் தம்பதியர் சுமார் பத்தாண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்டனர். கடந்த சில மாதங்களாக கணவருக்கு உடல்நிலை சரியில்லாததால் அது குறித்து அவரது மனைவி மந்திரவாதி ஒருவரை நாடினார்.
கணவருக்கு அன்றாடம் காலையில் நான்கு லட்டுகளும் மாலையில் நான்கு லட்டுகளும் சாப்பிடக் கொடுக்கவேண்டும் என்றும் இடையில் வேறு எந்த உணவையும் தரக்ககூடாது என்றும் அந்த மந்திரவாதி, தன்னைக் காணச் சென்ற அந்தப் பெண்ணிடம் ஆலோசனை கூறினார். மந்திரவாதி சொன்னபடி அந்தப் பெண் அப்படியே செய்தார்.
இதனால் அந்தப் பெண்ணின் கணவர் வாழ்க்கையே வெறுத்துப்போன நிலையில் விவாகரத்திற்காகப் பதிவு செய்தார். அந்த லட்டைத் தவிறு வேறு எந்த ஆகாரமும் தனது மனைவி கொடுக்க மறுப்பதாக அந்த ஆடவர் கூறினார். எனவே அவரை விவாகரத்து செய்ய விரும்புவதாக பாதிக்கப்பட்ட கணவர் கூறினார்.