பெங்களூரு: கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவையில் 17 அமைச்சர்கள் நேற்று பதவியேற்றனர். கர்நாடக மாநிலத்தில் கடந்த மாதம் 26ஆம் தேதி குமாரசாமி ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றுக்கொண்டது.
கடந்த வியாழனன்று டெல்லியில் அமித்ஷாவை எடியூரப்பா சந்தித்துப் பேசினார். அப்போது அமைச்சரவையை விரிவாக்கம் செய்வது குறித்து அமித்ஷா இறுதி ஒப்புதல் அளித்ததை அடுத்து, நேற்று காலை புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
கர்நாடக அமைச்சரவையில் 34 அமைச்சர்கள் இடம்பெறமுடியும் என்ற நிலையில், முதற்கட்டமாக நேற்று 17 அமைச்சர்கள் மட்டும் பதவியேற்றனர்.
ஸ்ரீகோவிந்த் மக்தப்பா கரஜோல், அஸ்வத் நாராயண், லக்ஷ்மண் சங்கப்பா சாவடி, ஈஸ்வரப்பா, அசோகா, ஜகதீஷ் ஷட்டர், ஸ்ரீராமுலு, சுரேஷ் குமார், சோமன்னா, சி.டி.ரவி, பசவராஜ் பொம்மை, கோட்டா ஸ்ரீவாஸ் பூஜாரி, மதுஸ்வாமி, சந்திரகாந்த கவுடா, நாகேஷ், பிரபு சவுகான், ஜோலி சசிகலா அன்னா சாகேப் ஆகிய 17 பேர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
அவர்களுக்கு கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.
எடியூரப்பா அரசுக்கு ஆதரவு தெரிவித்து வந்த சுயேச்சை எம்.எல்.ஏ. நாகேஷும் அமைச்சராக பதவியேற்றார். எடியூரப்பா முதல்வராகப் பதவியேற்று 25 நாட்களுக்குப் பிறகு அமைச்சர்கள் ேநற்று பதவியேற்றனர்.