முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்துக்கு முன்பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டதால் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர் உச்ச நீதிமன்றத்துக்கு விரைந்துள்ளார்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ப. சிதம்பரம் நிதி அமைச்சர் பொறுப்பை வகித்து வந்தார்.
இந்த நிலையில் 2007ஆம் ஆண்டில் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தில் ரூ. 305 கோடி அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் இந்த அனுமதிக்கு ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான நிறுவனத்துக்கு லஞ்சம் வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இது குறித்து சிபிஐ, அமலாக்கத் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்பிணை கேட்டு ப. சிதம்பரம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் அவரை கைது செய்ய இடைக்கால தடை விதித்தது. ஆனால் அவரை காவலில் வைத்து விசாரிக்க சிபிஐயும் அமலாக்கத் துறையும் வலியுறுத்தியிருந்தன. இந்த நிலையில் ப. சிதம்பரம் முன்பிணை கேட்டு தாக்கல் செய்த மனு நேற்று டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.