இந்தூர்: தனது தந்தை நீதிமன்ற ஓட்டுநராகவும், பாட்டனார் பாதுகாவலராகவும் பணியாற்றிய நிலையில், இளையர் ஒருவர் நீதிபதியாகப் பணியாற்றி வருகிறார்.
26 வயதே ஆன சேத்தன் பஜத் என்ற அந்த இளையர் தற்போது இந்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் சிவில் நீதிபதியாகி உள்ளார்.
இவரது தந்தை கோவர்தன் லால், இந்தூரில் உள்ள நீதிமன்றத்தில் ஓட்டுநராகப் பணியாற்றுகிறார். அதே நீதிமன்றத்தில்தான் கோவர்தன் லாலின் தந்தை பாதுகாவலராக இருந்தார்.
இதையடுத்து தனது மூன்று மகன்களில் ஒருவராவது நீதிபதியாக வேண்டும் என்பதே கோவர்தன் லாலின் லட்சியக் கனவாக இருந்துள்ளது.
இந்நிலையில் இரண்டாம் வகுப்பு நீதிபதிகளுக்கான பணியிடங்களை நிரப்ப நடைபெற்ற தகுதித் தேர்வில், பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் பட்டியலில் 13ஆவது இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார் சேத்தன்.
இதையடுத்து அவர் நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார்.
தனது தந்தைதான் தமக்கு வழிகாட்டி என்றும், நீதிபதிகளுக்கான தேர்வில் சிலமுறை தோல்வி கண்டபோதும் இறுதியில் வெற்றி கிடைத்ததாகவும் கூறுகிறார் சேத்தன்.
மக்களுக்கு விரைவாக நீதியை வழங்க வேண்டும் என்பதே தமது குறிக்கோள் என்று அவர் மேலும் கூறியுள்ளார். தனது நீண்ட நாள் முயற்சியின் பின்னே கடும் உழைப்பும் நீதிபதி ஆக வேண்டும் எனும் இலக்கும் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.