புதுடெல்லி: முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி (படம்) உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான 66 வயது அருண்ஜெட்லி, மோடி தலைமையிலான கடந்த அமைச்சரவையில் நிதியமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஜெட்லி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததால், அண்மையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை.
இந்நிலையில் சுவாசப் பிரச்சனை, உடல் சோர்வால் கடும் அவதிக்குள்ளான ஜெட்லி, கடந்த 9ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.
அருண் ஜெட்லிக்குப் பல்வேறு மருத்துவ நிபுணர்களைக் கொண்ட குழு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தாலும் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. தொடர்ந்து அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்தது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அருண் ஜெட்லி நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்.
துணை அதிபர் வெங்கையா நாயுடு, சோனியா காந்தி, ராகுல் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அருண் ஜெட்லியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தலைவர்கள் இரங்கல்: அருண் ஜெட்லியின் மறைவு குறித்து பிரதமர் மோடி கூறுகையில், “அருண் ஜெட்லி அரசியலில் ஜாம்பவான் ஆவார். இந்தியாவுக்கு நீடித்த பங்களிப்பை வழங்கிய ஒரு வெளிப்படையான தலைவராவார். அவரது மறைவு மிகுந்த மனவேதனையளிக்கிறது,” என்றார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “அருண் ஜெட்லியின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது மறைவு தனிப்பட்ட முறையில் எனக்குப் பேரிழப்பு,” என்றார்.
அதிபர் ராம்நாத் கோவிந்த், “அருண் ஜெட்லியின் மறைவு மிகுந்த வேதனைமிக்கது. “சிறந்த வழக்கறிஞர், நாடாளுமன்றவாதி, சிறந்த அமைச்சர், நாட்டின் கட்டமைப்பில் அவரின் பங்களிப்பு மகத்தானது,” எனக் கூறியுள்
ளார்.