சென்னை: லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை தமிழகத்தில் ஏற்படுத்த லண்டன் நகரில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக முதல்வர் பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு 14 நாள் சுற்றுப்பயணமாகச் சென்றுள்ளார்.
அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய தரமான சிகிச்சை வழங்கக்கூடிய லண்டன் கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை தமிழகத்தில் அமைக்க முதல்வர் பழனிசாமி தலைமையிலான குழுவுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதேபோல லண்டன் ஸ்கூல் ஆப் ஹைஜீன், டிராஃபிகல் மெடிசன் நிறுவனத்துடன் நோக்க அறிக்கை கையெழுத்தாகியுள்ளது.
டெங்கி, மலேரியா ஆகியவற்றுக்குக் காரணமான கொசுக்களை ஒழிக்க இந்த நோக்க அறிக்கை கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்களின்போது முதல்வருடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் இருந்தார். லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு எடப்பாடி பழனிசாமி அமெரிக்கா செல்ல உள்ளார்.
சுகாதாரத்துறையில் நீண்டகாலமாக தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது. வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும்கூட மேல் சிகிச்சை பெறுவதற்காக சென்னையில் உள்ள மருத்துவ
மனைகளுக்கு நோயாளிகள் வந்து செல்வது வாடிக்கையாக உள்ளது. கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை தமிழகத்தில் நிறுவ எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது தமிழக சுகாதாரத்துறை வரலாற்றில் ஒரு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் உயரதிகாரிகள் குழு வியாழக்கிழமை காலை இந்தோனீசியா புறப்பட்டுச் சென்றது. சிங்கப்பூரிலும் தாய்லாந்திலும் உள்ள சரணாலயங்கள் மற்றும் பூங்காக்களை குழு பார்வையிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

