மும்பை: ரசாயன ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் சிக்கி 12 பேர் பலியான சம்பவம் மகாராஷ்டிராவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய நேரப்படி நேற்று காலை 11 மணியளவில், இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.
துலே மாவட்டம் ஷிர்பூர் பகுதியில் அமைந்துள்ளது இந்த ரசாயன ஆலை. நூற்றுக்கும் மேற்பட்டோர் இங்கு பணியாற்றி வருகின்றனர்.
நேற்று காலை பெரும்பாலான ஊழியர்கள் அங்கு வேலை செய்து கொண்டிருந்தபோது, சுமார் 9 மணியளவில் ஆலையின் ஒரு பகுதியில் திடீரென வெடிச்சத்தம் கேட்டது. அங்கு 200 லிட்டர் அளவுள்ள பீப்பாயில் வைக்கப்பட்டிருந்த வெடி பொருள் வெடித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மேலும் சில வெடிச் சத்தங்களும் கேட்டுள்ளன.
அடுத்த சில நிமிடங்களில் அந்த ஆலையில் தீ மளமளவெனப் பரவியதால், கரும்புகை மூண்டுள்ளது. இதனால் பணியாளர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மேலும் பெரும்பாலான ஊழியர்கள் ஆலையில் இருந்து வெளியேற முடியாத வகையில் உள்ளே சிக்க நேர்ந்தது.
தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியைத் துரித கதியில் மேற்கொண்டனர். இந்த விபத்தில் 12 பேர் பலியான நிலையில் நாற்பதுக்கும் மேற்பட்டோர் படு காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.