மும்பை அருகே ஓஎன்ஜிசி நிறுவனத்துக்குச் சொந்தமான கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 3) காலை 7 மணியளவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
அதில் குறைந்தபட்சம் நால்வர் உடல் கருகி பலியாகினர். அவர்களில் மூவர் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினர் என்று கூறப்பட்டது. மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினர் மூவர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
மகாராஷ்டிர மாநிலம் நவிமும்பை அருகே உரானில் பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசிக்கு சொந்தமான கச்சா எண்ணெய், எரிவாயு சுத்திகரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது.
அங்கு எண்ணெய்க் கழிவுகள் சேமித்து வைக்கும் கிணற்றில் திடீரென பற்றிய தீ, மற்ற இடங்களுக்கும் வேகமாகப் பரவியது. தீப்பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எரிவாயு எடுத்துச் செல்லப்படும் குழாய்கள் மூடப்பட்டன. ஊழியர்கள் விரைந்து வெளியேற்றப்பட்டனர்.
தீயணைப்பு வீரர்கள், போலிசார் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் இரண்டு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
கச்சா எண்ணெய் டேங்கர்கள் மற்றும் எரிவாயு குழாய்களுக்குப் பாதிப்பு இல்லை என ஓஎன்ஜிசி நிறுவனம் தெரிவித்துள்ளது.