ரயில் வருவதைக் கவனிக்காமல் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பெண் ஒருவர் தண்டவாளத்தில் படுத்து நூலிழையில் உயிர்தப்பியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள குல்பர்காவில் நடந்த இச்சம்பவத்தில், பெண்மணி ரயில் நிலையத்தின் தளமேடையிலிருந்து தண்டவாளத்தில் இறங்கித் தாண்டத் தொடங்கினார். ஆனால் அத்தண்டவாளத்தில் வேகமாக வந்துகொண்டிருந்த ரயிலைப் பார்க்கத் தவறிவிட்டார் அப்பெண்மணி.
அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் பின்னர் அப்படியே ரயில் தண்டவாளத்தில் தன் உடலைக் குறுக்கிக் கொண்டு படுத்துவிட்டார்.
சம்பவ இடத்தில் இருந்த பயணிகள் நடப்பதைக் கவனித்துவிட்டு பதற்றத்துடன் கூச்சலிட்டனர். தரையோடு ஒட்டியவாறு படுக்க பெண்மணியிடம் சிலர் உரக்கக் கத்த, அதன்படி அப்பெண்ணும் படுத்துக்கொண்டார். ரயில் முழுவதுமாகக் கடந்து சென்றதும் எந்த ஒரு காயமும் இன்றி பெண் எழுந்து நடந்தார். சம்பவத்தைப் பதிவுசெய்த ஒரு பயணி அக்காணொளியை வெளியிட்டதைத் தொடர்ந்து, அது பார்ப்போரை அதிர வைத்து வருகிறது.

