ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராகியுள்ள தமிழிசை சவுந்தரராஜனுக்கு பலரும் வாழ்த்துகள் கூறி வருவதால் அவரது பேரும் புகழும் கொடி கட்டிப் பறப்பதுடன் அவருக்கு ஏராளமான வசதி வாய்ப்புகளும் கிடைத்துள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹைதராபாத்தில் ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் உள்ளது. சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பிரம்மாண்ட ராஜ்பவன் மாளிகையில் அடுத்த ஆறு ஆண்டுகாலத்திற்கு வசிக்க உள்ளார் தமிழிசை. அத்துடன் அவருக்கு 20 கார்கள், 200 பாதுகாவலர்கள், 200 பணியாளர்கள் உள்பட பல வசதி வாய்ப்புகளும் வழங்கப்பட உள்ளன.
பொதுவாக ஆளுநர் என்பவர் ஒரு மாநிலத்தின் முதல் குடிமகன் ஆவார். அவ்வகையில் தெலுங்கானா மாநிலத்தின் முதல் குடிமகளாக தற்போது தமிழிசை பதவி ஏற்றுக்கொண்டுள்ளார். தவிர நாட்டின் அதிபர், பிரதமர் உள்ளிட்ட உயர் பொறுப்பில் உள்ளவர்கள் ஹைதராபாத் வந்தால் இந்த மாளிகையில்தான் இருப்பார்கள்.
இந்த மாளிகையில் சுமார் 200 போலிசார் பாதுகாப்புப் பணியில் இருப்பார்கள். தவிர 200 பணியாளர்கள் ராஜ்பவனில் உண்டு. தெலுங்கானா மாநிலத்திற்கு உட்பட்ட 9 பல்கலைக்கழகங்களுக்கு தமிழிசைதான் வேந்தர். அங்கு துணைவேந்தர் நியமனம், பேராசிரியர்கள் நியமனம் போன்றவை தமிழிசையின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது. மேலும் அந்த பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவ, மாணவிகளுக்குப் பட்டம் கொடுக்கவேண்டியதும் தமிழிசைதான்.
இதுதவிர குடியரசு தினத்தன்று தெலுங்-கானா மாநிலம் சார்பில் நடைபெறும் விழாவில் தமிழிசைதான் தேசியக்கொடி ஏற்றவேண்டும். மேலும் தெலுங்கானாவில் முதல்வர், அமைச்சர்கள், தலைமை நீதி-பதி போன்றோருக்கும் தமிழிசை தான் இனி பதவிப் பிரமாணம் செய்து வைக்கவேண்டும்.

