பயங்கரவாதி மசூத் அசாரை பாகிஸ்தான் ரகசியமாக விடுவித்தது: இந்திய உளவுத்துறை

பயங்கரவாதி மசூத் அசாரை பாகிஸ்தான் ரகசியமாக விடுவித்தது: இந்திய உளவுத்துறை

2 mins read
b7fdb050-946b-4a32-87d3-973c66898819
ஜெய்ஷ்-இ-முகம்மது என்ற பயங்கரவாத அமைப்பை நிறுவிய மௌலானா மசூத் அசார். -

ஐக்கிய நாடுகள் மன்றத்தால் அனைத்துலக பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டுள்ள ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பின் தலைவனான மௌலானா மசூத் அசாரை பாகிஸ்தான் ரகசியமாக விடுதலை செய்துள்ளது என்று இந்திய உளவுத்துறைத் தகவல் தெரிவிக்கிறது.

இவ்வாண்டு பிப்ரவரி 14ஆம் தேதி காஷ்மீரின் புல்வாமாவில் இந்திய துணை ராணுவப் படையினர் சென்ற வாகனத்தின் கார் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் இந்திய வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். அத்தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பு பொறுப்பேற்றது. இதற்குப் பதிலடி தரும் வகையில் பிப்ரவரி 26ஆம் தேதி, பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீரில் அமைந்துள்ள பாலகோட்டில் இருந்த பயங்கரவாத முகாம்களை வான்வழியாகத் தாக்குதல் நடத்தி இந்தியா அழித்தொழித்தது.

இதனைத் தொடர்ந்து, மசூத் அசாரைக் கைது செய்த பாகிஸ்தான், அவனைப் பாதுகாப்புக் காவலில் வைத்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகின. இதனிடையே, இந்தியாவில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடந்த பொதுத் தேர்தலில் வென்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, 370வது சட்டப் பிரிவின்கீழ் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்புரிமைகளை ரத்து செய்தது. இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களை அரங்கேற்றும் நோக்கில் மசூத் அசாரை பாகிஸ்தான் ரகசியமாக விடுதலை செய்திருப்பதாக இந்திய உளவுத்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது. அத்துடன், மற்ற பயங்கரவாத அமைப்புகளும் பாகிஸ்தானில் சுதந்திரமாகச் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்புரிமைகள் ரத்து செய்த இந்திய அரசின் அதிரடி நடவடிக்கையை உளவறியத் தவறியது பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்குக் கிட்டிய தோல்வி என்றும் அதனால் பதில் நடவடிக்கையை எடுக்கவேண்டிய நெருக்கடியில் அந்த அமைப்பு இருக்கிறது என்றும் இந்திய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டதாக 'இந்துஸ்தான் டைம்ஸ்' செய்தி கூறியது. ஜம்மு-காஷ்மீர் மீது இந்தியாவின் கவனம் இருப்பதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, வேறு பகுதிகளில் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட மசூத் அசார் போன்ற பயங்கரவாதிகள் முயலலாம் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

முன்னதாக, பயங்கரவாதப் பயிற்சி முகாம்களை பாகிஸ்தான் மீண்டும் திறந்துவிட்டது என்றும் பயங்கரவாதிகளை இந்தியாவிற்குள் ஊடுருவச் செய்யும் முயற்சியில் அது இறங்கியுள்ளது என்றும் இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத் கடந்த வாரம் கூறியிருந்தார்.

இதற்கிடையே, பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு, ஜம்மு-காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவ முகாம்கள் மீது தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் இந்திய உளவுத்துறை வட்டாரத் தகவல்கள் கூறின. குறிப்பாக, லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நால்வர், சம்பா மாவட்டத்தில் பாரி பிராமணா, ஜம்மு பகுதியில் உள்ள சஞ்வன், கலுச்சக் ஆகிய ராணுவ முகாம்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்த முயலக்கூடும் எனச் சொல்லப்படுகிறது.