ஸ்ரீஹரிகோட்டா: நிலவில் தரை இறங்கிய விக்ரம் லேண்டர் இடமிருந்து தொடர்பு துண்டிக்கப்பட்டதால் அது என்னவாயிற்று என்பது மர்மமாக உள்ளது.
இந்தச் சூழ்நிலையில் விக்ரம் லேண்டர் இருக்கும் இடம் நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டர் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னமும் துல்லியமாக விக்ரம் லேண்டரை படம் பிடிப்பதற்காக ஆர்பிட்டரின் சுற்று வட்டப் பாதையின் உயரத்தைக் குறைக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர்.
ஆர்பிட்டர் நிலவுக்கு அருகே தென்துருவ பகுதியில் 100 கிலோ மீட்டர் உயரத்தில் தொடர்ந்து சுற்றி வருகிறது. அதில் ஆய்வுக் கருவிகளும் நிலவின் தரை பகுதியை துல்லியமாக படம் எடுக்கும் சக்திவாய்ந்த கேமராவும் பொருத்தப்பட்டு இருப்பதால் மாயமான லேண்டரைப் பற்றிய தகவல் கிடைக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்து இருந்தனர்.
அதன்படி விக்ரம் லேண்டர் நிலவின் தரைப் பகுதியில் இருப்பதை ஆர்பிட்டர் கண்டுபிடித்துள்ளது. இந்த நிலையில், நிலவின் மேற்பரப்பில் இருக்கும் விக்ரம் லேண்டரை துல்லியமாக படம் பிடிப்பதற்காக நிலவின் சுற்று வட்டப்பாதையில் 100 கி.மீட்டர் தொலைவில் சுற்றி வரும் ஆர்பிட்டரின் தொலைவை 50 கி.மீட்டராக குறைக்க இஸ்ரோ ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எனினும் இதற்கான பணிகள் துவங்க ஓரிரு நாட்கள் ஆகலாம் எனவும் கூறப்படுகிறது.நிலவை பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, சந்திரயான்-2 என்ற விண்கலத்தை ஏவுகணை மூலம் கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி விண்ணில் ஏவியது.
‘ஆர்பிட்டர்’, ‘விக்ரம் லேண்டர்’, ‘பிரக்யான் ரோவர்’ ஆகிய மூன்று பகுதிகளை உள்ளடக்கியது சந்திரயான்-2 விண்கலம்.
விண்கலம் நிலவை நெருங்கியதை தொடர்ந்து ஆர்பிட்டரில் இருந்து பிரக்யான் ரோவருடன் கூடிய விக்ரம் லேண்டர் கடந்த 2ஆம் தேதி தனியாக பிரிந்தது.
பின்னர் விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கியபோது கடைசி இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் அதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.