புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை ஆகஸ்டு 21ஆம் தேதி சிபிஐ கைது செய்தது.
அவரை 19ஆம் தேதி வரை விசாரணைக் காவலில் வைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நிலையில் திஹார் சிறையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப. சிதம்பரம், என்னை ஏன் கைது செய்தார்கள் என்பதற்கு இதுவரை எனக்கு விடை கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.
2007ஆம் ஆண்டில் ஐஎன்எக்ஸ் ஊடகக் குழுமம் ரூ.305 கோடி அந்நிய நேரடி முதலீடு பெற அனுமதி வழங்கப்பட்டது.
இதில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி அப்போது நிதி அமைச்சராக இருந்த ப. சிதம்பரத்திடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திஹார் சிறையிலிருந்து டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ள ப.சிதம்பரம், “அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க டஜன் கணக்கான அதிகாரிகள் நடைமுறைகளை நிறைவேற்றியுள்ளனர். எதற்கு நீங்கள் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளீர்கள். நீங்கள் கடைசியில் கையெழுத்து போட்டதற்காகவா? என்று பலர் கேள்வி கேட்கின்றனர். இதற்கு என்னிடம் பதில் இல்லை. அதிகாரிகளும் எந்த தவறும் செய்யவில்லை,” என்று கூறியுள்ளார்.