'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர் டாக்டர் கைலாசவடிவு சிவனின் ஆரம்ப வாழ்க்கை கரடு முரடாக இருந்தது. விவசாயிக்கு மகனாகப் பிறந்த திரு சிவன், கல்லூரி செல்லும்வரை காலில் செருப்பு கூட அணியாத அளவுக்கு ஏழையாக வாழ்ந்திருந்தார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க ‘சந்திரயான் 2’ விண்வெளிப் பயணத்தை வழி நடத்திய டாக்டர் சிவன், பயணத்தில் ஏற்பட்ட தடங்கலால் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தோளில் தேம்பித் தேம்பி அழுதபோது ஆழமான கடமையுணர்ச்சி உலகிற்குப் புலப்பட்டது.
இளம் வயதில் கால்சட்டை வாங்குவதற்குக் காசில்லாமல் வேட்டியைக் கட்டிக்கொண்டு பள்ளிக்குச் செல்வார் டாக்டர் சிவன். ஆயினும், துன்பங்களால் துவண்டுபோகாமல் அவர் துணிந்து போராடினார். “கிடைக்காததைப் பற்றி கவலைப்படாமல் கிடைத்ததை வைத்து சிறப்பாகச் செய்தேன்,” என்று அவர் கடந்த மாதம் இஸ்ரோ தலைமையகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறினார்.
மாங்காய்த் தோட்டத்தில் தனது தந்தையுடனே வேலை செய்து வளர்ந்ததாக டாக்டர் சிவன் தெரிவித்தார். வீட்டுக்கு அருகே இருந்த கல்லூரியில் படித்து அவர் தனது தந்தைக்குத் தொடர்ந்து உதவியாற்றினார்.
தனக்குப் பிடித்தது எதுவும் கிடைக்காத பட்சத்தில் கிடைத்ததைப் பிடித்துக்கொண்டு முன்னேற பாடுபட்டதாகக் கூறுகிறார் டாக்டர் சிவன். பொறியியல் பாடத்தைப் படிக்க விரும்பியும் செலவு காரணங்களால் அறிவியல் இளநிலைப் பாடத்தைப் படிக்க அவர் தமது தந்தையால் கட்டாயப்படுத்தப்பட்டார். பிறகு அவர் கணக்கிலும் பின்னர் தொழில்நுட்பத்திலும் பட்டம் வாங்கினார்.
வேலை தேடிக்கொண்டிருந்தபோது ஆரம்பகாலத்தில் தாம் விரும்பிய வாய்ப்புகள் தமக்கு அமையவில்லை என்றும் அவர் மனம்விட்டுப் பகிர்ந்தார். விரும்பியது கிடைக்காமல் போனதால் மனம் வெம்பினாலும் அதனைத் தாங்கிக்கொண்டு கிடைக்கும் வாய்ப்புகளை வைத்து உன்னதம் அடைந்திருக்கிறார் டாக்டர் சிவன்.