மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் பீட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லங்காபாய் காராட் (38). இவருக்கு ஏற்கெனவே 11 குழந்தைகள் உள்ளனர். இதுமட்டுமில்லாமல் 5 குழந்தைகள் பிறந்த ஓராண்டுக்குள் இறந்துவிட்டனர். மேலும் மூன்று முறை தானாகவே கரு கலைந்துள்ளது.
இந்தச் சூழலில் தற்போது 20வது முறையாக கர்ப்பம் அடைந்துள்ளார் லங்காபாய். இதுகுறித்து அந்த மாவட்டத்திலுள்ள மருத்துவர் அசோக் தொரட் கூறுகையில், "ஏற்கெனவே இந்தப் பெண்ணிற்கு 11 குழந்தைகள் உள்ளனர். தற்போது மீண்டும் இந்தப் பெண் 20வது முறையாக கருவுற்றுள்ளார். அவர் கருவுற்றவுடன் மருத்துவ சோதனைகள் நடத்தப்பட்டன. தாயும் குழந்தையும் நன்றாக உள்ளனர்.
"அவருக்கு சிறந்த முறையில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் அவரை சுகாதாரமான இடத்தில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதான் அவரது முதல் மருத்துவமனை பிரசவமாகும். இதற்கு முன்பு அவருடைய பிரசவங்கள் அனைத்தும் வீட்டிலேயே பார்க்கப்பட்டன. அதிக முறை பிரசவம் நடந்துள்ளதால், இவரது கர்ப்பப்பை வலு இழந்துள்ளதால் மருத்துவமனையில் பிரசவம் பார்க்க வலியுறுத்தினோம்," என்றார்.

