குண்டூர்: போலிஸ்காரர்களுக்கு பணிப்பெண் போல கிட்டத்தட்ட 40 ஆண்டு காலம் சேவை புரிந்த பெண் நேற்று முன்தினம் காலமானார். உயர் போலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமான போலிசார் ஓடோடி வந்து அவரது சடலத்தை ஏந்தி இறுதி மரியாதை செலுத்தி மூலம் நன்றிக் கடனை வெளிப்படுத்தினர்.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள தடேபள்ளி போலிஸ் நிலையத்தில் போலிசாருக்கு உதவும் பணிகளை அவர் பல்லாண்டு காலமாகச் செய்து வந்ததாக செய்திகள் தெரிவித்தன. இதில் வியப்பு என்னவெனில் அந்தப் பெண்ணின் பெயரோ வயதோ போலிசாருக்கு அவரது மரணம் வரை தெரியவே இல்லை. மேலும் வாய் பேச இயலாதவர் அந்த மூதாட்டி.
40 ஆண்டுகளுக்கு முன்னர் தமது கணவர் இறந்ததும் போலிஸ் நிலையத்தின் அருகே வசிக்கத் தொடங்கிய அந்தப் பெண் போலிஸ் நிலையத்துக்கு உதவி ஆய்வாளர் ஒருவரால் பணிவிடை செய்ய அழைத்து வரப்பட்டார். அந்த அதிகாரி மாறுதல் ஆகி சென்ற பின்னரும் இவரது சேவை தொடர்ந்தது.
போலிசாரே அவருக்கு பனவத் முகம்மா என்று பெயர் வைத்து அழைத்து வந்தனர். பெண் போலிசார் விடுப்பில் இருக்கும்போது பெண் கைதிகளை லாக்-அப்பில் அடைத்து அவர்களின் தேவைகளை அறிந்து செயல்படுவது, பணியில் மூழ்கி இருக்கும் போலிசாரின் உணவு ஏற்பாடுகளை நினைவுபடுத்துவது. இப்படி போலிஸ் நிலையத்துக்குள் ஓர் அலுவலக உதவியாளர்போல அனைத்து வேலைகளையும் அந்தப் பெண் செய்து வந்ததாக இறுதி அஞ்சலி செலுத்த வந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒரு காலத்தில் இந்த போலிஸ் நிலையத்தில் சாதாரண போலிஸ்காரராகப் பணியாற்றி வெறோர் இடத்தில் அதிகாரியாக இப்போது பணியாற்றுவோர்கூட முகம்மாவின் மரணம் அறிந்து ஓடி வந்ததாக ‘நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ தெரிவித்தது.