புதுடெல்லி: 2012க்குப் பிறகு முதல் முறையாக இந்திய பல்கலைக்கழகங்களுக்கு உலகத் தர வரிசையில் சறுக்கல் ஏற்பட்டுள்ளது. உலகத் தர வரிசையில் முதல் 300 நிலைகளில் இந்திய பல்கலைக்கழகங்கள் ஒன்றுகூட இடம் பிடிக்கவில்லை. இருந்தாலும் பட்டியலில் இடம்பிடித்த இந்திய பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கை 49லிருந்து 56க்கு அதிகரித்துள்ளது. ஐஐடி ரோபர் மட்டுமே 350வது இடங்களுக்குள் பட்டியலில் இடம்பிடித்து உச்சத்தில் இருந்தது.
தற்போது பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகமும் (ஐஐஎஸ்) முதல் 350 நிலையில் இடம் பிடித்துள்ளது. 2020ஆம் ஆண்டின் டைம்ஸ் உயர் கல்வி உலகப் பல்கலைக் கழகங்களின் தர வரிசையில் முதல் 500 இடங்களில் மொத்தம் ஆறு இந்திய பல்கலைக் கழகங்கள் இடம்பெற்றுள்ளன. இதற்கு முந்தைய ஆண்டின் தர வரிசையில் ஐந்து இந்திய பல்கலைக் கழகங்கள் மட்டும் முதல் 500 இடங்களில் இடம் பிடித்திருந்தன.
ஒட்டுமொத்தமாக ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் தொடர்ந்து நான்காவது ஆண்டாக பட்டியலில் முன்னிலை வகிக்கிறது. உலக முழுவதும் உள்ள 92 நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 1,300 பல்கலைக் கழகங்கள் தர வரிசைப்படுத்தப்பட்டன. இந்தப் பட்டியலில் ஆக அதிக பல்கலைக்கழங்கள் இடம்பெற்ற நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
மொத்தம் 56 இந்திய பல்கலைக் கழகங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதற்கிடையே தர வரிசை பட்டியலின் ஆசிரியர் எல்லி போத் ெவல், உலக உயர் கல்வியில் இந்தியாவுக்கு நல்ல வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவித்தார். பல்கலைக் கழகங்களின் ஆங்கில மொழியின் பயன்பாடு, அதிகரித்துவரும் இளம் வயது மக்கள் தொகை ஆகியவற்றால் இந்தியா முன்னிலையைப் பெற முடியும் என்று அவர் கூறினார். இருந்தாலும் முதல் 300 இடங்களில் இந்திய பல்கலைக் கழகங்கள் இடம் பிடிக்காதது தமக்கு மிகுந்த ஏமாற்றமளிக்கிறது என்றார்.