புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள பள்ளபக்தவார்பூர் கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலையை கிராம மக்கள் இணைந்து நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள ஆற்றில் கரைக்க சென்றனர்.
அப்போது சிலையைக் கரைக்க ஆற்றின் ஆழமான பகுதிக்குள் சிலர் சென்றதால் ஆற்றின் நீரோட்டத்தின் வேகத்தால் அடித்துச் செல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் இரவு முழுவதும் தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், பிள்ளையார் சிலை கரைக்கும் போது அடித்துச்செல்லப்பட்ட 4 பேரின் உடல்களை மீட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, பிள்ளையார் சிலை கரைப்பின்போது மாநிலம் முழுவதும் 18 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பதாக மும்பை காவல்துறை தெரிவித்திருந்தது.
மகாராஷ்டிர மாநிலத்தில் பிள்ளையார் சதுர்த்தி விழாவின் நிறைவு நிகழ்வான பிள்ளையார் ஊர்வலம் நடைபெற்றது.
நகரம் முழுவதும் பிள்ளையார் சிலைகள் நேற்று முன்தினம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட இடங்களில் கரைக்கப்பட்டன.
நேற்றும் மும்பையின் பல்வேறு பகுதிகளில் பிள்ளையார் ஊர்வலம் தொடர்ந்து நடைபெற்றது. மும்பையில் மட்டும் 3,800 சிலைகள் கரைக்கப்பட்டுள்ளன.
சிலைகளை நீர்நிலைகளின் ஆழமான பகுதியில் கரைக்கும்போதும் குளிக்கும்போதும் எதிர்பாராதவிதமாக பலர் தண்ணீரில் விழுந்துள்ளனர். சிலர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.