அமராவதி: இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினம் நகரில் பேட்மிண்டன் பயிலகம் ஒன்றை அமைக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் உலக வெற்றியாளர் போட்டிகளில் தங்கம் வென்று சாதித்த சிந்து, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை நேற்று முன்தினம் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அப்போது, பயிலகம் அமைக்கவேண்டும் என்ற தமது ஆசையை முதல்வரிடம் பகிர்ந்துகொண்டார் சிந்து. அவரது விருப்பத்தை நிறைவேற்ற தேவையான உதவிகளைச் செய்வதாக உறுதியளித்த திரு ஜெகன், முதற்கட்டமாக ஐந்து ஏக்கர் நிலத்தை ஒதுக்கவும் உத்தரவிட்டார்.
இந்தியாவின் ஆக உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷண் விருதுக்குத் தமது பெயர் பரிந்துரைக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்த சிந்து, “அந்த விருது கிடைத்தால் நிச்சயம் அது என் வாழ்க்கையின் பெருமைமிக்க தருணமாக இருக்கும்,” என்றார்.