பெங்களூரு: மாணவர்களின் ஓயாத கைபேசிப் பயன்பாட்டினால் வெறுத்துப்போனார் கல்லூரி முதல்வர் ஒருவர். கர்நாடக மாநிலத்தில் உள்ள எம்இஎஸ் சைதன்ய கல்லூரி முதல்வரான ஆம்.எம். பட், வகுப்பில் மாணவர்கள் பயன்படுத்திய கைபேசிகளை சுக்குநூறாக உடைத்தார்.
பாடம் நடத்தும்போது அதனைக் கவனிக்காமல் மாணவர்கள் கைபேசிகளில் மூழ்கிக் கிடப்பதைக் கண்ட கல்லூரி நிர்வாகம் ஏற்கெனவே பலமுறை எச்சரிக்கை செய்தது. பயன்படுத்தும்போது பறிக்கப்படும் கைபேசிகள் உடைத்து நொறுக்கப்படும் என்ற இறுதி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
ஆனால், அவற்றைக் கண்டுகொள்ளாத மாணவர்கள் வகுப்புகளில் கைபேசிகளைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர். கடந்த வியாழக்கிழமை திடீர் சோதனை நடத்தப்பட்டபோது 16 மாணவர்களின் கைபேசிகள் பறிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து அனைத்து மாணவர்களையும் வரவழைத்த கல்லூரி முதல்வர் பறிக்கப்பட்ட கைபேசிகளில் சிலவற்றை அவர்களின் முன்னால் சுத்தியலால் உடைத்து சுக்கு நூறாக நொறுக்கினார். ‘இனியாவது திருந்துங்கள்’ என்று மாணவர்களிடம் அவர் கூறினார்.
கல்லூரி முதல்வரின் இந்தச் செயலை சமூக ஊடகங்களில் ஆதரித்தும் எதிர்த்தும் பலவாறாகக் கருத்துகள் பதிவேற்றப்பட்டு வருகின்றன.