இந்தியாவின் ஆகப் பழமையான அறிவியல் இலாகாவான இந்திய நில அளவைத் துறை, முதன்முறையாக ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்தி அந்நாட்டின் வரைபடங்களை உருவாக்க உள்ளது. ஆளில்லா வானூர்திகளின் பயன்பாட்டால் வரைபடங்களின் துல்லியமும் பிரிதிறனும் அதிகரிக்கும் என்று அளவைத் துறையின் தலைவர் கிரீஷ் குமார் தெரிவித்தார்.
“முன்பு நாங்கள் விமானங்களிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பயன்படுத்தி வரைபடங்களை அமைத்திருந்தோம். ஆனால் அதற்கான செலவு அதிகமாக இருப்பதுடன் குறைபாடுகளும் ஏராளமாக இருந்தன. ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்த இதுவே சரியான தருணம்,” என்று அவர் கூறினார்.
கிராம வட்டாரங்களின் நிலப்பட்டாக்களை மின்னிலக்கமாக்குவதற்கான வசதியையும் இந்தத் திட்டம் ஏற்படுத்துவதாகத் திரு குமார் சொன்னார். துல்லியமான வரைபடங்களின் மூலம் குடிமக்கள் சொத்து அட்டைகளையும் தங்கள் நிலங்களுக்கான முறையான பட்டாக்களையும் பெறுவது மேலும் சுலபமாகும் என்றார் அவர்.